Sunday, December 11, 2016

காங்கிரஸிற்கு தமிழ் நாட்டில் மறுவாழ்வு!


விசித்திரமாகவும், பைத்தியக் காரத் தனமாகவும் தோன்றலாம். கிட்டதட்ட புதைக்கப் பட்ட கட்சி தமிழ் நாட்டில் உயிர்த்தெழுவதா என்ற கேள்வியும் எழலாம். கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பாருங்கள்.


அதிமுக வின் தலைவி திரு ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்த உடன் அந்த கட்சியின் / தமிழகத்தின் வெற்றிடம் பிரம்மாண்டமாக தெரிகிறது. ஜெயலலிதாவின் ஆளுமை அப்படிப் பட்டது. எம்ஜியாரும் கருணாநிதியும் அடைய முடியாத உயரம் இது.  (வெற்றிடம் பற்றி சென்ற வருடம் நான் எழுதியது)

இப்போது நடராஜன் அவர்களின் சித்து வேலைகளால் கிட்டதட்ட எல்லோரும் சசிகலாவின் பின் ஓரணியில் திரண்டு வருகிறார்கள். இங்கு எல்லோரும் என்பது அறியப்பட்ட / அறியப்படாத அதிமுக 'தலைவர்கள்' மற்றும் மீடியா 'நண்பர்கள்'

ஆனால், மக்களில் பெரும்பாலோருக்கு சசிகலா என்றால் வேப்பங்காய் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மக்களின் பொதுவான கருத்து ஜெயலலிதா நல்லவர்தான், ஆனால் சசிகலா தான் எல்லா கெட்டவற்றிக்கும் காரணம் என்பது. யோசித்துப் பாருங்கள். எவருக்காகவாது 10000 பேர் மொட்டை போட்டுக் கொண்டதாக சரித்திரம் உண்டா? எம்ஜியாருக்குக் கூட கிடையாது.

பிஜேபியை பொறுத்தவரை அவர்கள் சசிகலா பின்னால். கௌதமியை அறிக்கைவிட வைத்து சசிகலாவுக்கு ஒரு செக். சேகர் ரெட்டியை ரெய்டு செய்து பன்னீர் செல்வத்துக்கு ஒரு செக். சசிகலா தலைவியாக இருப்பதே பிஜேபி க்கு நல்லது என நினைக்கிறார்கள்.

திமுகவை பொறுத்தவரை, எது செய்தாலும் அவர்களுக்கு கெட்டப் பெயர். அதனால் அமைதியாக இருப்பது மட்டுமே அவர்களுக்கான ஆப்ஷன்.

  இது தான் காங்கிரஸிற்கு சரியான சந்தர்ப்பம். திருநாவுக்கரசர் தலைவராக இருப்பது காங்கிரஸிற்கு பெரிய அதிர்ஷ்டம். நேரடியாக எதுவும் செய்ய வேண்டாம்.

ஜெயலலிதாவின் சகோதரர் மகளை தலைவியாகக் கொண்டு அம்மா திமுக ஆரம்பித்தால், மிக விரைவில் கட்சியும் ஆட்சியையும் அதற்கு வந்துவிடும். அவரை முன்னிறுத்தி காங்கிரஸ் தன்னை பலப் படுத்திக் கொள்ளவேண்டியதுதான்!

ஒரு 10000 கோடி இருந்தால் இதைத்தான் நான் செய்வேன்! இல்லையே!

மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...