Wednesday, September 4, 2013

அமெரிக்கா ... பாலம்..

Youtube -இல் உள்ள மிகப்பெரிய சிக்கல்.. பல வித குப்பைகளுக்கு இடையே உள்ள முத்துக்களை கண்டெடுப்பது தான். அப்படி குவிந்துள்ள பலவித குப்பைகளுக்கு இடையே நான் கண்டெடுத்த முத்து இன்று..

சான்பிரான்சிஸ்கோ நகரை ஒரு பக்கம் சூழ்ந்துள்ள தண்ணீரின் மீது தரை வழி இணைப்பதற்கு இரண்டு பாலங்கள் உள்ளன. ஒன்று மிகப் பிரபலமான Golden Gate பாலம். மற்றொன்று Bay Bridge. இதில் பே ப்ரிட்ஜ் போக்குவரத்து மிக அதிகமான ஒன்று. முக்கிய காரணம், அது இணைக்கும் பல நகரங்கள்.



42000 மணி நேரம்.. கிட்ட தட்ட ஐந்து வருட கால உழைப்பில் உருவான புதிய 
பாலத்தின் நீட்டிப்பு இங்கு நான்கு நிமிட வீடியோவாக.. 

சில குறிப்புகள் 

  • இந்தப் பாலம் இணைப்பது சான் பிரான்சிஸ்கோ மற்றும் ஓக்லாண்ட் நகரங்களை 
  • இதில் இருப்பது ஆறு வழிப்பாதை. போக ஆறு. வர ஆறு. எமெர்ஜென்சிக்கு என்று ஒவ்வொரு புறமும் ஒன்று என மொத்தம் பதினான்கு வழிப்பாதை 
  • ஏற்கனவே இருந்த பாலத்திற்கு இணையாக ஒரு தற்காலிக இணைப்பை கட்டி போக்குவரத்திற்கு பெரிய பாதிப்பில்லாமல் கட்டினார்கள் 
  • மொத்த கட்டமைப்பு உருவாக எடுத்துக்கொண்ட ஐந்து வருடங்களில் மொத்தம் 6 நாட்களே பாலத்தை முழுமையாக மூடினார்கள். அதையும் ஒவ்வொரு முறையும் மூன்று நாட்கள் என மூன்று நாட்கள் விடுமுறை வரும் நாட்களில் மட்டுமே மூடினார்கள். மூடுவதற்கு ஒவ்வொரு முறையும் கிட்டதட்ட ஆறு மாதங்களுக்கு முன்னேயே அறிவித்துவிட்டு செய்தார்கள். 
  • இந்த வீடியோ தயாரிப்பதற்கு இருபது லட்சம் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டன..
ஆச்சர்யமாக இல்லை?

Thursday, August 29, 2013

சரியும் ரூபாயின் மதிப்பு!

Image Courtesy : Google Images

எது நடக்கக்கூடாது என்று பயந்தோமோ அது நடந்து கொண்டிருக்கிறது.
ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே போகிறது. போனவாரம் வரை 1 டாலருக்கு 62 இல் இருந்த மதிப்பு இப்போது 1 டாலருக்கு 67 என்ற நிலைக்கு சென்றுவிட்டது.

அரசின் போக்கோ நான்கு குருடர்கள் யானையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாகத்தை தடவிப்பார்த்து அதன் உருவத்தை ஒவ்வொருமாதிரி கற்பனை செய்து கொள்வார்களே, அது போல இருக்கிறது.

NDTV -யின் இப்போதைய நிலையை விளக்கும் கலந்துரையாடலை கேட்டேன். காங்கிரஸ் சார்பாக வந்த ஒருவர் "இப்போதைய நிலைக்கு நாம் அயன் ஓர் ஏற்றுமதி செய்ய முடியவில்லை. அதற்க்கு காரணம் கர்நாடகாவில் அந்த அயன் ஓரில் ஏகப்பட்ட ஊழல். கர்நாடகாவில் அப்போதைய ஆட்சி பி.ஜே.பி. அதனால் இந்த சிக்கலுக்கு காரணம் பி.ஜே.பி. தான்!" என்று ஒரு போடு போட்டார். சும்மா சொல்லக்கூடாது. குடுத்த காசுக்கு நல்லாவே கூவுகிறார்!

அதே கலந்துரையாடலில் இன்னொருவர், "பொருளாதார மேதை" என நினைக்கிறேன்.. (ஊரெங்கும் இந்த "பொருளாதார மேதைகளின்" அட்டகாசம் தாங்க முடியவில்லை!). அவர் சொன்னது.."இந்தியா ஆயிரத்தி நூறு வருடமாக பொருளாதார ரீதியாக முன்னேறாத நாடு. (என்ன கணக்கோ!) கடந்த இருபது வருடமாக தான் இந்த வளர்ச்சி. கொஞ்சம் குறைந்திருக்கிறதே ஒழிய இப்போதும் நாம் மிக பலமாகத்தான் இருக்கிறோம்" என்றார்!

Image Courtesy : Google Images

நமது ப.சி யோ, என்னமோ இப்போதுதான் இதெல்லாம் கண்ணுக்கு தெரிவது போல, "ப.சி.யின் பத்து கட்டளைகளை" வெளியிட்டிருக்கிறார். அதில் முதல் கட்டளை, அரசின்  செலவை குறைப்பது. அதே நேரத்தில் சோனியா எல்லோருக்கும் உணவு என்ற ஓட்டு வாங்கும் திட்டத்தின் மூலம் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் கோடி புதிய செலவை உருவாக்கி இருக்கிறார். இவர்களெல்லாம் ஒருவரை ஒருவர் கலந்து பேசி ஏதாவது செய்கிறார்களா.. இல்லை சோனியா தவிர மற்றவர் எல்லோரும் புடுங்குவது ஆணியே இல்லை என்கிறார்களா ?

   பதிவுலகத்தின் கண்களாலும், தமிழ் பத்திருக்கைகளின் கண்களாலும் தமிழகத்தை பார்த்துக்கொண்டிருப்பதால் இது பற்றிய விழிப்புணர்வு மிக குறைவாக இருப்பதாக தோன்றுகிறது.

போகும் போக்கை பார்த்தால் அடுத்த ஒரு மாதத்திற்குள் அனைத்து பொருட்களும் 25% வரை விலை உயரக்கூடும் என நினைக்கிறேன். அதைவிடக்கொடுமை பணம் கொடுத்தாலும் பொருட்கள் கிடைக்காமல் போவது. சில அத்யாவசியம் இல்லாத ஆடம்பரப் பொருட்கள் கிடைக்காவிடில் தலை முழுகிப்போகாது. (பெட்ரோமாக்ஸே வேணுமா?) ஆனால், முக்கியமான பொருட்களான பெட்ரோலிய பொருட்கள் (பெட்ரோல், டீசல், சமையல் காஸ்..), இறக்குமதி செய்யும் சில மருந்துகள், போன்றவற்றின் தட்டுப்பாடு வந்தால் அது பல விதத்தில் எல்லோரின் வாழ்வையும் பாதிக்கும்.

அரசின் செயல்கள் யாவும்.. எத்தை தின்னால் பித்தம் குறையும்.. என்ற மனோபாவத்தில் பலவற்றையும் முயற்ச்சித்து பார்ப்பது போல இருக்கிறது..

இதற்க்கு நடுவில் சிரியாவின் மீது அமேரிக்கா போர் தொடுக்குமோ என்ற பயம்.. (ஏண்டா ..ஏன் .. ஏன்  இந்த கொலைவெறி? ) பிரிட்டன் பார்லிமென்ட் அந்த நாட்டிற்கு போருக்கு அனுமதி கொடுக்கவில்லை என்பது கொஞ்சம் ஆஸ்வாசம் தருகிறது!

இந்த நிகழ்வுகள் எல்லோரயுமே பாதிக்கும் என்பது மிக விரைவில் அனைவரும் அறிந்து கொள்வார்கள். என்ன.. அப்போது அது மிக கசப்பாக இருக்கும்!

Image Courtesy : Google Images

Wednesday, August 21, 2013

இந்திய பொருளாதாரம் - கவலைக்கிடமான நிலையில்..


Image courtesy : Google Images




இந்திய பொருளாதாரம் மிக அபாயமான நிலையில் உள்ளது. ஒரே மாதத்தில் 7% மதிப்பை ரூபாய் இழந்துள்ளது. இதன் ஆபத்தை இரண்டு உதாரணங்கள் மூலம் உணரலாம்.
கொடுக்க வேண்டிய கடன் டாலரில் திருப்பி கொடுக்க வேண்டியிருப்பதால், ஒரே மாதத்தில் கடன் தொகை 7% அதிகரித்துள்ளது! ஆண்டிற்கு 84% வட்டி!

Image courtesy : Google Images

70% பெட்ரோல் இறக்குமதி ஆவதால், பெட்ரோல் பொருட்கள் விலை மேலும் மேலும் உயரும். நம் நாட்டில் பெரும்பாலான சரக்குகள் (அந்த 'சரக்கு' உட்பட) பெட்ரோல் பொருட்களால் இயங்கும் வாகனங்கள் மூலம் விற்பனை ஆகும் இடங்களுக்கு எடுத்து செல்வதால் எல்லா பொருட்களுமே 7% உயரும்.

இன்னுமொரு நெருக்கடி குறைந்த காலத்தில் திருப்பிக்கொடுக்கவேண்டிய கடன் மிக அதிகரித்திருக்கிறது. இன்னும் ஒரே வருடத்தில் இந்தியா திருப்பிக்கொடுக்க வேண்டிய கடன் - $172 Billion. கிட்டதட்ட  பதினொரு லக்ஷம் கோடி ருபாய் மதிப்பில்! .
Image courtesy : Google Images


திருப்பிக்கொடுக்கவேண்டிய நேரத்தை நீட்டிக்கொள்ளலாம். ஆனால், நாம் இருக்கும் நெருக்கடியான நிலையினால்  வட்டி அதிகமாகும்.

நம் கையிருப்பும் மிக குறைந்துள்ளது. ஏற்றுமதி - இறக்குமதி இடையில், இறக்குமதி அதிகமாக இருப்பதால், நம் கையில் உள்ள தொகை ஏழு மாத பற்றாக்குறையை சமாளிக்கும் அளவே உள்ளது.

இது வரை RBI எடுத்த நடவடிக்கை எதுவும் பலனளிக்கவில்லை! 1990-ஆம் ஆண்டு இருந்த நெருக்கடி நிலைக்கு இப்போது வந்திருக்கிறோம்.

அப்போது அதை சமாளிக்க லாப நிலையில் இருந்த பொதுத்துறை நிறுவனகள் ஒன்றொன்றாய் பலி கொடுத்து சமாளிக்க முடிந்தது. இப்போது என்ன செய்யப்போகிறோம்? (BSNL போன்ற பொன் முட்டை இட்ட வாத்துக்களை தனியார் லாபத்திற்காக பலி கொடுத்துவிட்டோம்)

எந்த அளவு இந்த ஆபத்தை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என தெரியவில்லை. எல்லோருக்குமே இதன் மூலம் பாதிப்பு இருக்கும்.

Image courtesy : Google Images

வேலையில்  ஆள் குறைப்பு , வானளாவிய விலை உயர்வு. ஒரே நாளில் பங்கு சந்தைகளில் வாழ்நாள் சேமிப்பை இழக்கும் பலர்..

இன்னும் தலைவா ரிலீஸ் ஆகவில்லை என்று கவலைப்படும் பலரை பார்த்தால் தான் கவலையாக இருக்கிறது!


Friday, May 3, 2013

தெரிந்த பெயர்கள். தெரியாத கதைகள் -1


என் புரிதல் படி, இந்து மதம் பலமுறை, பலவிதமாக சொல்வதில் முக்கியமானது... நாம் செய்யும் எந்த ஒரு செயலுக்கும் உண்டான நல்ல / தீய பலன்களை அடைந்தே தீருவோம். அதை விளக்கும் வகையில் ஒரு கதை..

முன்னொரு காலத்தில் அஷ்ட வசுக்கள் என்ற தேவர்கள் இருந்தனர்.  அவர்களும் அவர்கள் மனைவியரும் ஒரு முறை இமயமலை அடிவாரத்தில் இருந்த ஒரு காட்டிற்கு வந்தனர். வந்த நோக்கம் சுற்றிப்பார்த்து அனுபவிக்க. அப்போது அங்கிருந்த வசிஷ்ட மகரிஷி ஆசிரமத்தை பார்த்தனர். அப்போது அவர் அங்கில்லை. வெளியே எங்கேயோ சென்றிருந்திருக்க வேண்டும். ஆசிரமத்தை சேர்ந்த நந்தினி என்ற பசுவை கண்டனர். நித்ய யவ்வனத்தை - இளமையை- வழங்கும் பால் கொடுக்கும் சிறப்பை உடையது நந்தினி.

எட்டு வசுக்களில் ஒருவரான பிரபாசாவின்  மனைவிக்கு இந்த பசுவை நாம் கொண்டு சென்றால் என்ன என்று தோன்றியது. அவள் தன்  கணவனிடம் இதை தெரிவித்தாள். அவள் கணவன்.." நமக்கெதற்கு இது? நமக்கு இளமை என்றும் சாஸ்வதம். இதன் பால் நமக்களிக்கப்போவது எதுவும் இல்லை. மேலும், வசிஷ்டர் இல்லாத போது பசுவை கவர்ந்து செல்வது தவறு" என்றான். 

அதற்கு அவள் "இந்த பசு எனக்கில்லை. மானிடப்பெண் ஒருத்தி என் தோழி. இந்த பசு அவளிடம் இருந்தால் அவளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். உங்களால் முடியாது என்றால் விட்டுவிடுங்கள். எதற்கு வியாக்யானம்?" என்றால்.

இதற்கு மேலும் வாதிக்க முடியாத  பிரபாசா பசுவை கட்டி இழுத்துவர முனைந்தான். தனி ஒருவனாக இழுக்க முடியாததால் மற்ற வசுக்களின் உதவியை வேண்டினான். அவர்களும்  தேவவிரதனுடன் இணைந்து  நந்தினி என்ற பசுவை வசிஷ்டர் வருவதற்கு முன் கட்டி இழுத்துச்சென்றனர். கொஞ்சம் பொறுத்து வசிஷ்டரிடம் அனுமதி பெற்று சென்றிருக்கலாம். க்ஷண கணத்தில், ஆமாம்.. அவரென்ன நம்மை விட பெரியவரா என்ற அஞ்சானம் அவர்கள் கண்ணை மறைத்துவிட்டது. 

வசிஷ்டர் வந்தவுடன் நந்தினியை காணாது திடுக்கிட்டார். எனினும் திரிகால ஞானியான அவர் பசுவை இழுத்துச் சென்றது யார் என்று எளிதில் அறிந்துகொண்டார். இழுத்துச்சென்ற எட்டு பேரும் மனிதராய் பிறக்கக்கடவது! என்று சாபமளித்துவிட்டார். 

அதை கேள்விப்பட்ட உடன் வசுக்கள் எட்டு பேரும்  வசிஷ்டரிடம் மன்னிப்பு கோரினர். க்ஷண நேரத்தில் இந்த நிலை வந்துவிட்டதே என்று வருந்தினர்.

வசிஷ்டர் அதற்கு "செய்த தவற்றுக்கு தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும். நான் இட்ட சாபத்தை என்னாலும் விலக்கிக்கொள்ள முடியாது. போகட்டும்.  சாரம் விலகாமல் கொஞ்சம் மாற்றிக்கொள்கிறேன். பசுவை இழுத்துச்சென்ற பிரபாசா நீண்ட நாள் மனித வாழ்க்கையின் இன்ப துன்பங்களை அனுபவித்து பின் இங்கு வர வேண்டும். மற்றவரெல்லாம் பிறந்த உடனே மரணித்து இங்கு வந்துவிடலாம். " என்றார்

ஏதோ இந்த வரையாவது குறைத்தாரே என்று பிரபாசாவை முறைத்தவாரே அங்கிருந்து வசுக்கள் சென்றனர். நீண்ட ஆலோசனைக்கு பிறகு உடனே மரணிப்பதையும் உறுதி செய்துகொள்ள கங்கையை அடைந்தனர். கங்கா மாதாவை வேண்டி, அவர் ஒரு அரசனை மணம் செய்துகொண்டால் தாங்களே அவருக்கு குழந்தைகளாக பிறப்பதாகவும்  முதலில் பிறக்கும் ஏழு குழந்தைகளையும் உடனே கங்கை ஆற்றில் விட்டுவிடும்படியும் அதன் 
மூலம் தங்கள் சாபம் நிவர்த்தியாகும் என்று மன்றாடிக்கேட்டுக்கொண்டனர். அரசன் மகனாகப் பிறந்தால் நீண்ட நாள் வாழப்போகும் பிரபாசாவும் கஷ்டப்படாமல் வாழ்வான் என்று நினைத்தனர். கங்கையும் மனம் இறங்கி 
ஒப்புக்கொண்டார்.

கங்கைக்கரையில் கங்கையை மங்கை வடிவில் ஒருநாள் கண்ட சந்தனு மதி மறந்தார். மணமுடிக்க ஆசைப்பட்டார். சந்தனு அவரை மணமுடிக்க ஆசைப்பட்டவுடன் மணம் செய்துகொள்ள கங்கா தேவி ஒரு நிபந்தனை விதித்தார். தான் என்ன செய்தாலும் தடுக்கக்கூடாது என்பதும், அதை ஏன்  செய்தாய் என கேட்கக்கூடாது என்பதுமே அந்த நிபந்தனை. கங்கையின் அழகில் மதி மயங்கிய சந்தனுவும் அப்படி செய்வதாக வாக்களித்தார். இது போன்ற சாபம் இருப்பதும், அதன் பொருட்டே கங்கை பிற்காலத்தில் நடந்து கொள்வதும் மானிடரான சந்தனு அறிந்துகொண்டால் அனைத்தும் விரயமாகும் என்ற காரணமே இப்படி ஒரு நிபந்தனைக்கு வழி வகுத்திருக்க வேண்டும்.

அவர்களுக்கு பிறந்த முதல் ஏழு  குழந்தைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக கங்கையாற்றில் விட்டு கங்கை  கொன்றதையும் சந்தனு தடுத்ததால் தப்பி பிழைத்த எட்டாவது குழந்தை தேவவிரதன் கதையையும் அனைவரும் அறிவோம். இந்த தேவவிரதனே பின்னர்  அனைவராலும் போற்றப்பட்ட பீஷ்மர்! 


Thursday, April 25, 2013

கடவுள்!



ஒரு தாயின் வயிற்றில் 8 மாதம் வளர்ந்த இரு குழந்தைகள் இருந்தன. ஓரளவு வளர்ந்து விட்டதால் இருவருக்கும் இடம் பற்றாக்குறை! நிறையநாள் இங்கேயே இருக்கமுடியாது என்பது இருவருக்குமே தெரிந்து விட்டது. 

முதல் குழந்தை : "எப்படியும் நாம் கொஞ்ச நாட்களில் இங்கிருந்து  சென்றுவிடுவோம். இங்கிருந்து சென்ற பிறகு கூட இதுவரை இருந்தது போல வாழ்க்கை என்று ஒன்று இருக்கும் என நம்புகிறாயா?"


இரண்டாவது : கண்டிப்பாக. இதற்க்கு வெளியேயும் கண்டிப்பாக ஏதாவது இருக்க வேண்டும். எனக்கென்னமோ நாம் வெளியே சென்ற பிறகு நன்றாக இருக்கவேண்டும் என்று ப்ரிபேர் பண்ணிக்கொள்வதர்க்கே இங்கிருக்கிறோம் என்று தோன்றுகிறது!"

முதலாவது : "முட்டாள்! இங்கிருந்து போனபின்னால் வாழ்க்கை கிடையாது. அப்படி ஒன்றிருந்தால் அது எப்படி இருக்கும் என்று சொல் பார்ப்போம்?"

இரண்டாவது : "எனக்குத்தெரியாது. ஆனால் இங்கிருப்பதை விட கண்டிப்பாக வெளிச்சமாக இருக்கக்கூடும். யாருக்குத் தெரியும்? நாம் கால்களால் நடப்போமோ.. வாயில் உணவு உண்ணுவோமோ என்னவோ?"

முதலாவது : "நீ சொல்வது சுத்த பைத்தியக்காரத்தனம்.. கால்களால் நடப்பதாவது.. வாயால் உணவு உண்பதாவது.. நமக்கு உணவு வரும் குழாய் (Umbilical cord ) இருக்கிறது. என்ன.. ரொம்ப சின்னதாக இருக்கிறது. அதனால் தான் வெளியே போனபின் வாழ்க்கை இல்லை என்கிறேன்!"

இரண்டாவது : "எனக்கு என்னமோ வெளியே வேறு இடம் இருக்கும் என்று தோன்றுகிறது. அது நாம் இருக்கும் இடத்தை விட மிக வித்யாசமாக இருக்கும் எனவும் நினைக்கிறேன்."

முதலாவது : "நீ சொல்வது தவறு. முடிந்த வரை இங்கேயே இருப்போம். வெளியே போனால் அவ்வளவுதான்!"

இரண்டாவது : "ஒன்று நிச்சயம். வெளியே போனவுடன் நாம் அம்மாவை பார்ப்போம். அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்."

முதலாவது : "அம்மாவா? நீ அம்மா இருக்கிறார் என்பதை நம்புகிறாயா? எங்கே இருக்கிறார் அம்மா?"

இரண்டாவது : "அம்மா நம்மை சுற்றி எல்லா எடத்திலும் இருக்கிறார். அம்மாவின் உள்ளே தான் நாம் இருக்கிறோம். அம்மா இல்லாவிட்டால் நமது உலகமே இருக்காது."

முதலாவது : "என் கண்ணுக்கு அம்மா தெரியவில்லை. அதனால் அம்மா இருக்கிறார் என்று நம்ப மாட்டேன்."

இரண்டாவது : "கொஞ்ச நேரம் அமைதியாக எதைபற்றியும் சிந்திக்காமல் கேள். அம்மாவை உன்னால் உணரமுடியும்"

முதலாவது அமைதியாக எதையும் சிந்திக்காமல் கேட்கத்தொடங்கியது... 

thanks to my friend, Sandy, for sharing this in her Facebook wall.

Saturday, April 20, 2013

எம்பதி


எம்பதி என்பது மற்றவர் பார்வையில் அவர் பிரச்சனையை உணர்ந்து கொள்வது. 
ஒவ்வொருபிரச்சனையிலும் , மற்றவர் பார்வையில் பார்க்க முடிந்தால் நம் அணுகுமுறையில் பெரிய வித்யாசம் இருக்கும். இதோ ஒரு அருமையான வீடியோ.. 





ஒவ்வொருவரின் மனத்திலும் இருக்கும் கவலைகளை அறிந்து கொள்ள முடிந்தால் நம் பார்வையில் கருணை இன்னும் அதிகமாக இருக்குமோ?

Sunday, April 7, 2013

இசை அனுபவம்!

இன்றைய இசை அறிமுகம் மிக புதுமையான ஒன்று. அகபெல்லா (A capella) என்பது எந்த வித இசை கருவிகளும் இல்லாமல் இசையையும் பாடகர்களே இசை போலவே பாடிவிடுவது (சத்தம் செய்வது?)

அமெரிக்காவில் உள்ள கல்லூரிகள் பலவற்றில் இதற்கென்றே இசை குழுக்கள் இருக்கும். எந்த இசை கருவியும் இல்லாததால், எந்த முதலீடும் இல்லாமல் மாணவர்கள் இதை பழக முடியும். இசை மீது காதல் ஒன்றிருந்தால் போதும் என்பது இதன் சிறப்பு. 

அகபெல்லாவின் இசை தொகுப்பு ஒன்று..



இப்போது அதிலும் புதுமை செய்த ஒருவர் பற்றி. அலா வார்டி (Alaa Wardi).  ஈரானில் பிறந்து சவுதி அரேபியாவில் வாழும் இளைஞர். இசையின் எல்லா வாத்தியங்களின் சத்தங்களையும் அவரே தனித்தனியாக உருவாக்கி எல்லாவற்றையும் இணைத்து அற்புதமான இசை தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். எந்த அளவு இசையை ஒருவர் நேசித்துக் கொண்டிருந்தால்  இப்படி ஒரு ஆல்பத்தை உருவாக்கியிருக்க முடியும் என்று நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. 

இதோ அவர் வெளியிட்டுள்ள ஒரு ஹிந்தி பாடல்.. 


இன்னும் ஒரு அற்புதமான பாடல் அவரிடம் இருந்து.. 



அசந்து விட்டேன்.. இசையை எந்நேரமும் சுவாசித்துக்கொண்டிருக்கும் ஒருவரால் தான் இதை செய்திருக்க முடியும். நீங்களும் ரசித்து அனுபவிப்பீர்கள் என நம்புகிறேன்..