Monday, November 12, 2012

ஒபாமாவின் தீபாவளி வாழ்த்து!



ஒபாமாவின் தீபாவளி வாழ்த்தை பார்த்தேன். வெறும், கொஞ்சம் ஸ்ரத்தையோடு தீபாவளியை பற்றி கொஞ்சம் சொல்லி வாழ்த்தும் சொல்லியிருக்கிறார்.



எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

Wednesday, October 3, 2012

இன்னும்.. இன்னும்.. கீழே..




இதற்கு முன் இன்னும் எவ்வளவு கீழ் தரமாக இறங்கப்போகிறோம் என்று எழுதியிருந்தேன். இன்றைய செய்தியை படித்தால், அதைவிட கீழ்த்தரமாக போக அதிக நாட்கள் ஆகவில்லை என்று தெரிந்து கொண்டேன்.

ராஜாவை பார்லிமென்ட் எனர்ஜி கமிட்டிக்கு மெம்பராகவும் கல்மாடியை பார்லிமென்ட் வெளியுறவு கமிட்டிக்கு மெம்பராகவும் அரசு நியமித்திருக்கிறது. இதில் கல்மாடியை வெளியுறவு கமிட்டிக்கு உறுப்பினறாக்கியதர்க்கு காங்கிரஸின் நகைச்சுவை உணர்வு தான் காரணம் என நினைக்கிறேன். அவர் தானே இந்தியாவின் மானத்தை உலக அளவுக்கு வாங்கியவர்!

குற்றவாளியோ இல்லையோ. அந்த சந்தேகத்தினால் தானே சிறையில் இருந்தார்கள்? மந்திரி பதவியும் போனது? இன்று வரை அந்த வழக்குகள் முடியவில்லை. ஆனால் மறுபடியும் இவர்களுக்கு அதிகாரம் மிக்க பதவியை மத்திய அரசு கொடுக்கிறது என்றால் என்ன அர்த்தம்? இன்னும் மூன்று வருடம் தேர்தல் இல்லை. எவன் என்ன நினைத்தால் எனக்கென்ன என்ற திமிர் தானே?

இந்த அளவு மக்களை இளிச்சவாயர்களாக நினைக்கும் அரசை இந்தியா பார்த்ததில்லை. அதே போல, மன்மோகன் போன்ற பசு தோல் போர்த்திய புலியை , நரியை, இதுவரை இந்தியா பார்த்ததில்லை!

Saturday, September 22, 2012

நமக்கெல்லாம் சுரணையே இல்லையா?



நான் முன்னொரு காலத்தில் யூனியன் ஆதிக்கமில்லாத ஒரு அரசு நிறுவனத்தில் பணி புரிந்தபோது கேட்டது. ஒருவர் அந்த நிறுவனத்தின் எச் ஆர் தலைவரை, யூனியன் ஆதிக்கமில்லாததை எப்படி சாதித்தீர்கள் என்று கேட்டாராம். அதற்கு அவர், இளைஞ்சர்கள் வேலைக்கு சேர்ந்த உடனேயே அவர்கள் தலையை தூக்க முடியாத அளவு வேலை கொடுத்து பிசியாக வைத்திருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் நாம் என்ன சொன்னாலும் செய்யும் நிலைக்கு கொண்டு வந்து விடலாம் என்றாராம்.

இன்று இந்தியாவில் நடப்பதை பார்த்தால் அந்த எச் ஆர் தலைவரின் சூழ்ச்சி போல ஒன்று தான் இந்தியாவின் தற்போதய நிலைமைக்கு காரணம் என்று தோன்றுகிறது!

யோசித்துப்பார்த்தால், கார், பர்னிச்சர் செட் போன்ற சிற்சில விஷயங்கள் தவிர என் அப்பாவின் இப்போதைய என் வயது வாழ்க்கைக்கும் இப்போது என் வாழ்க்கைக்கும் பெரிய அளவு வித்யாசம் இல்லை! இருந்தும், அவருக்கு அப்போது நிறைய நேரம் இருந்தது போலவும் இப்போது எனக்கு இல்லாமல் இருப்பது போலவும் இருக்கிறது. இது எனக்கு மட்டும் பொருந்தவில்லை. என் நண்பர்கள் பலரின் வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது. தினப்படி வாழ்க்கையே ஓட்டமாக இருக்கும்போது எப்படி போராடுவது?

நமக்கு எந்த விதத்திலும் உதவாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரமாகவாவது இல்லாமல் இருக்கக்கூடாதா என்று எரிச்சலூட்டும் அரசியல் வாதிகள். மன்மோகனின் பேச்சை கேட்டீர்களா? இவர்களுக்கெல்லாம் கொஞ்சமாவது வெட்கம், மானம் எதுவுமே இருக்காதா? நேர்மையான நிர்வாகமே வளர்ச்சி தரும் என்று கொஞ்சமும் கூசாமல் எப்படி இவரால் சொல்ல முடிகிறது? திருப்பி திருப்பி சொல்லவே அலுப்பு தட்டும் அளவுக்கு ஊழல்கள்! 

இவர் ஆட்சியின் சாதனை ஒன்றே ஒன்று தான். ஆயிரம் கோடி, லட்சம் கோடி என்று மறுபடி மறுபடி ஊழல் செய்து, ஆயிரம், லட்சம் என்பதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்று மக்களை நினைக்க வைப்பது தான்!  அதைவிட பெரிய விஷயம், இது வரை எந்த அரசியல் வாதியும் மாட்டவில்லை! குற்றம் நிரூபணம் ஆகும் வரை குற்றவாளி இல்லை. அவ்வளவு சீக்கிரம் குற்றம் நிரூபணம் ஆக விடமாட்டோம் என்று நடந்து கொள்ளும் அரசு! சி பி ஐ என்பது வாசலில் கட்டி வைத்திருக்கும் நாய் தான். யாரை காட்டுகிறோமோ அவரை பார்த்து குறைக்கும் என்று சொல்லாமல் சொல்லுகிறது அரசு!

இந்த அளவு ஊழல் புகார் வந்தபின்னும், இப்படி மன்மோகனால் சொல்ல முடிகிறது என்றால் அதற்க்கு என்ன காரணம் இருக்க முடியும்? இவர்களெல்லாம் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார்கள். இவர்கள் தின பிழைப்பே போராட்டமாக இருக்கும்போது இவர்களா எதிர்த்து ஏதாவது செய்வார்கள் என்ற நம்பிக்கை தானே?

நமக்கெல்லாம் உண்மையிலேயே சுரணை இல்லையா?

Saturday, September 8, 2012

உங்களுக்கு வருஷத்துக்கு எவ்வளவு நாள் லீவு?



உங்களுக்கு வருஷத்துக்கு எவ்வளவு நாள் லீவு? மொத்தமாக பத்து நாள்? இருபது நாள்? முப்பது நாள்? என்ன படிச்சு என்ன பிரயோஜனம்? இதுக்கு மேல நம்மால யோசிக்கக்கூட முடியலை. 

இங்க பாருங்க.. ஒருத்தர் வருஷத்துக்கு இருநூற்று ஐம்பது நாள் சொந்த வேலையா வெளிநாட்டில் தங்கி இருந்திருக்கிறார். மிக அதிகமாக சம்பாதிக்கும் இவர் மந்திரியாகவும் இருக்கிறார்!

யார் அந்த மந்திரி? நம்ப 'கல்வித்தந்தை', 'விழா நடத்தும் நாயகன்' ஜெகத்ரட்சகன் தான்!

இன்றைய தினமலரில்..


Sunday, July 1, 2012

இன்னும் எந்த அளவு கீழ் நோக்கி செல்லப்போகிறோம்?



ஒரு பக்கம் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் சங்மா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது முதல்வராக இருக்கும் ஜெயலலிதா அவர்களிடம் ஆதரவு பெற அவர் வீட்டிற்கு செல்கிறார். மறு பக்கம் அடுத்த ஜனாதிபதி ஆக பெரிய வாய்ப்பு உள்ள பிரணாப் 2G குற்றம் சாட்டப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ள கனிமொழி வீட்டிலிருந்து ஜனாதிபதி பிரச்சாரத்தை தொடங்குகிறார்!  (இதில் சட்டப்படி ஒரு தாரத்திற்கு மேல் மணமுடிப்பது குற்றம் என்றிருக்கும்போது கருணாநிதியின் இரண்டாவது மனைவியின் வீட்டிலிருந்து  பிரச்சாரத்தை தொடங்குவது இன்னுமொரு கொடுமை!  எதிலும் தன் குடும்பத்திற்கு லாபத்தை எதிர்நோக்கி காய் நகர்த்தும் கருணாநிதி இப்போதெல்லாம் டெல்லியிலிருந்து யார் வந்தாலும் அவர்களை கனிமொழி வீட்டில்தான் சந்திக்கிறார். முதலில் அந்தோனி.. இப்போது இவர்!)

ஜனாதிபதி பதவி என்பது வெறும் பதவி மட்டும் இல்லாமல் முதல் குடிமகன் என்ற மதிப்பையும் கொடுக்கிறது. அதுவும் இல்லாமல், அவர்கள் மேல் குற்றவழக்கு எதையும் தொடரவும் முடியாமல் ஒரு பாதுகாப்பும் கொடுக்கிறது (என அறிகிறேன்.. தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்). யாரையும் மரண தண்டனையிலிருந்து கூட மன்னிக்க உரிமை உள்ள பதவி!

இப்படி இருக்கும்போது இந்த பதவிக்கு வருபவர்மேல் யாருடைய நிழலும் விழாமல் இருப்பது முக்கியம் இல்லையா? குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர்களின் நிழல் இவர்கள் மீது விழுந்தால் எந்த வழக்கிலும் அவர்கள் சார்பாக இருக்க நேரிடும் அல்லவா. 

நம் ஊரில் தான் conflict of interest என்பது பற்றி யாரும் கவலைப்படுவதில்லையே!

Tuesday, June 26, 2012

இந்திய பொருளாதாரம்.. ஆபத்தான பாதையில்!



இத்தனை நாட்கள் நமது நாட்டில் முதலீடு செய்வது நல்ல வருமானத்தை கொடுக்கும் என்ற காரணத்தால் அந்நிய முதலீடு குவிந்து வந்தது. அதை வைத்து எந்த ஒரு நல்ல அரசும் செய்ய
 வேண்டியவை

  • நல்ல உள் கட்டமைப்பு
  • எல்லோருக்கும் எளிதில் நல்ல குடிநீர்
  • எல்லோருக்கும் நல்ல மருத்துவ வசதி
  • விளை பொருட்களை கெடாமல் வைத்திருக்க கோல்ட் ஸ்டோரேஜ் வசதிகள் 
  • பெரும்பான்மையான மக்கள் கண்ணியத்துடன் வாழ வேலை வாய்ப்பு 
  • எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய நல்ல கல்வி..

இதில் முதல் ஒன்றில் மட்டும் நல்ல முன்னேற்றம். மற்ற எதிலும் கடந்த இருபது வருடங்களில் பெரும்பாலும் எந்த முன்னேற்றமும் இல்லை. இல்லையேல் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக இன்னும் மோசமாக போய்கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில், ரூபாயின் மதிப்பு அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதை தடுக்க அரசு செய்வது, மேலும் முதலீட்டை வசீகரிக்க, இது நாள் வரை இருந்த பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கிறது. மேலும், பாதுகாப்பு துறையிலும் அந்நிய முதலீட்டை அனுமதித்திருக்கிறது.

இது மிக ஆபத்தானது. ஆடம்பரத்திற்காக கந்து வட்டி காரனிடம் கடன் வாங்குவது போன்றது! மிக விரைவில் அழிவை தந்துவிடும்.

ஏதாவது அதிசயம் நடந்து இந்த ஆட்சி ஒழிந்து நல்ல ஒரு ஆட்சி வராதா என்று ஏங்குகிறேன்!

Friday, June 15, 2012

ஏழை மக்கள் உபயோகிக்கும் பெட்ரோலிய பொருள் அதிரடி விலை குறைப்பு!




ஒரு பக்கம் பகல் கொள்ளையாக பெட்ரோலின் மேல் அசலைவிட அதிகமாக வரி வைத்து விற்று விட்டு 'ஒரே நஷ்டம்' என்று பச்சை புளுகு புளுகும் 'படித்த நல்லவர்கள்' ஆளும் இந்த அரசு! இந்த பெட்ரோல் கொள்ளை பற்றி நான் ஏற்கனவே எழுதியிருந்தாலும், வவ்வால் மிக தெளிவாக அவர் பதிவில் விளக்கியிருந்தார். 

அதே நேரம் இந்தியாவில் பரம ஏழைகள் தினமும் உபயோகிக்கும் விமான பயணிகள் வசதிக்காகவும், விஜய் மல்லய்யா, கலாநிதி மாறன் போன்ற 'உத்தம' முதலாளிகள் நலனுக்காகவும் அதிரடியாக 5% Jet Fuel விலையை 
இந்த அரசு குறைத்திருக்கிறது.  ஏப்ரல்   மாதத்திலிருந்து இது வரை ஐந்து முறை விலை குறைத்திருக்கிறதாம் இந்த அரசு! 

இந்த jet fuel மட்டும் என்ன தாவரத்தில் இருந்தா விளைகிறது? முழுக்க முழுக்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகும் பெட்ரோலிய பொருள் தானே? அப்போது மட்டும் ரூபாய் மதிப்பு, உலக சந்தையில் விலை உயர்வு போன்ற காரணங்கள் கிடையாதா? 

எந்த அளவு மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள்!  

வயறு எரிகிறது!  'படித்தவன் பாவம் பண்ணினால் ஐயோ என்று போவான்' என்னும் பாரதி வாக்கு உண்மையாக காத்திருக்கிறேன்!