Monday, July 7, 2025

கந்த சஷ்டி கவசம்

கந்த சஷ்டி கவசம் பாராயணம் பண்ணும்போது இரண்டு விஷயங்கள் என்னை தொந்தரவு செய்து கொண்டிருந்தன. ஒன்று, மலிந்து கிடைக்கும் எழுத்துப் பிழைகள். சிற்சில தளங்களில் குறைவாக இருந்தாலும், இருக்கவே செய்கிறது. என்னை பொறுத்தவரை சூலமங்கலம் சகோதரிகள் சொல்வது சரியான ஒன்று என்ற வகையில், வரிக்கு வரி, அவர்கள் பாடலை கேட்டு இந்த பதிப்பை சரி செய்து கொள்கிறேன். இரண்டாவது, சூலமங்கலம் சகோதரிகள் பாடுகையில் இடையிடையே மாறும் ராகம். அதே போல் சொல்ல முயற்சிப்பதற்கு எளிய வழியாக, ராகங்கள் மாறும்போது, வரிகள் நிறம் மாறுவது என்ற பரீட்சார்த்த முயற்சி செய்கிறேன். தவறுகள் இருந்தால் கமெண்டில் சொல்லுங்கள். பாடலுடன் சரி பார்த்துக்கொண்டு திருத்திவிடுகிறேன்.


ஸ்கந்த சஷ்டி கவசம்

காப்பு

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்;
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்து ஓங்கும்;
நிஷ்டையுங் கைகூடும்;
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந்தனை.

குறள் வெண்பா

அமரர் இடர் தீரவமரம் புரிந்த
குமரன் அடி
நெஞ்சே குறி..

நூல்

சஷ்டியை நோக்கச் சரவணபவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணியாட (4) (x 2)

மையல் நடனம் செய்யும் மயில்வாகனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக (8)

இந்திரன் முதலாய் எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக (12)

ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹணபவனார் சடுதியில் வருக (16)


ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறன (20) (x 2)

வசர ஹணபவ வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னையாளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசங்குசமும் (24)

பரந்த விழிகள் பன்னிர ண்டிலங்க
விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக
ஐயம் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும் (28)

கிலியும் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென் முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலியாம் சிவ குகன் தினம் வருக (32)

ஆறுமுகமும் அணிமுடியாறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் (36) (x 2)

ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்தினமாலையும் (40)

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப்பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும் (44)

இருதொடை யழகும் இணைமுழந்தாளும்
திருவடியதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொக மொக மொகமொக மொக மொக மொகென (48)

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி (52)

டுடுடுடு டுடுடுடுடு டுடுடுடு டுடுடு
டகு டகு டிகு டிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து (56)

என்தனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென்றும் (60) (x 2)

உன் திருவடியை உறுதியென்றெண்ணும்
என் தலைவைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க்குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க (64)

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க
விழிசெவியிரண்டும் வேலவர் காக்க (68)

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க (72)

கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்தின வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க (76) (x 2)

வடிவேலிருதோள் வளம் பெறக்காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதினாறும் பருவேல் காக்க (80)

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடையழகுற செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண் குறியிரண்டும் அயில் வேல் காக்க (84)

பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வடிவேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க (88)

ஐவிரலடியினை அருள் வேல் காக்க
கை களிரண்டும் கருணை வேல் காக்க
முன் கையிரண்டும் முரண்வேல் காக்க
பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க (92)

நாவிற் சரஸ்வதி நற்றுணையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனை வேல் காக்க
எப்பொழு தும்மெனை எதிர்வேல் காக்க (96)

அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வஜ்ரவேல் காக்க
அரையிருள் தன்னில் அணையவேல் காக்க (100)

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க (104)

தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் (108)

அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம்மராட்ச தரும் (112)

அடியனைக் கண்டால் அலறி கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலு மிருட்டிரும் எதிர்ப்படு மன்னரும்
கனபூசை கொள்ளும் காளியோட னைவரும் (116)

விட்டாங்காரரும் மிகுபல பேய்களும்
தண்டியங் காரரும் சண்டாளர்களும்
என் பெயர் சொல்லவும் இடி விழுந்தோடிட

ஆனையடியினில் அரும்பாவைகளும் (120)

பூனை மயிரும் பிள்ளைகளென்பும்
நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் (124)

ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதுமஞ் சனமும் ஒருவழிப்போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட (128)

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாள்ளெனைக் கண்டால் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய் விட்டலறி மதிகெட்டோடப் (132)

படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடனங்கம் கதறிடக் கட்டு
கட்டியுருட்டு கை கால் முறியக்
கட்டு கட்டு கதறிடக் கட்டு (136)

முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர் வடிவேலால் (140)

பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலதுவாக
விடு விடு வேலை வெருண்டது ஓட
புலியும் நரியும் புன்னரி நாயும் (144)

எலியும் கரடியும் இனித்தொடர்ந்தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க (148)

ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்பு பித்தம்
சூலை சயம் குன்றம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி (152)

பக்கப்பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்தரணை பருஅரையாப்பும்

எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால் (156)

நில்லாதோட நீயெனக்கு அருள்வாய்
ஈரேழுலகமும் எனக்குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்காய்
மண்ணாள் அரசரும் மகிழ்ந்துறவாக (160)

உன்னைத் துதிக்க உன்திருநாமம்
சரவணபவனே சையொளிபவனே
திரிபுரபவனே திகழொளிபவனே
பரிபுரபவனே பவமொழிபவனே (164)

அரிதிருமருகா அமராபதியைக்
காத்துத் தேவர்கள் கடும் சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை (168)

இடும்பனை அழித்த இனியவேல் முருகா
தணிகாசலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா


பழநிப் பதிவாழ் பாலகுமரா (172)

ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல் வராயா
சமரா புரிவாழ் சண்முகத்தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய் (176)

என்னா விருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினே னாடினேன் பரவசமாக
ஆடினே னாடினேன் ஆவினன் பூதியை (180)

நேசமுடன் யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடனிரஷி அன்னமும் சொன்னமும் (184)

மெத்த மெத்தாக வேலா யுதனார்
சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க (188)

வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்
வாழ்க வாழ்க வாரணத்துவசம்

வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க (192)

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன் கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே (196)

பிள்ளையென் றன்பாய்ப் பிரியமளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென்றடியார் தழைத்திட வருள் செய்
கந்தசஷ்டி கவசம் விரும்பிய (200)

பாலன் தேவராயன் பகர்ந்ததை
காலையில் மாலையில் கருத்துடனாளும்
ஆசாரத்துடன் அங்கம் துலக்கி
நேச முடனொரு நினைவதுவாகி (204)

கந்தர் சஷ்டி கவச மிதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டு


ஓதியே செபித்து உகந்து நீறணிய (208)

அஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய்
திசை மன்னர் எண்மர் செயலதருள்வர்
மாற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மையளித்திடும் (212)

நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீரெட்டாய் வாழ்வர்
கந்தர் கை வேலாம் கவசத்தடியை
வழியாய் காண மெய்யாய் விளங்கும் (216)

விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடிப்பொடியாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வசத்குருு சங்காரத்தடி (220)

அறிந்தெனதுள்ளம் அஷ்டலெக்சுமிகளில்
வீரலட்சுமிக்கு விருந்துணவாக
சூரபத்மாவைத் துணித்தகையதனால்
இருபத்தேழ்வர்க்கு உவந்தமுதளித்த (224)

குருபரன் பழனிக் குன்றினிலிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத் தடுத்தாட் கொள் என்றன துள்ளம்

மேவிய வடிவுறும் வேலவா போற்றி (228)

தேவர்கள் சேனாபதியே போற்றி
குற மகள் மன மகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பாயுதனே இடும்பா போற்றி (232)

கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேலே போற்றி
உயர்கிரி கனகசபைக்கோர் அரசே
மயில் நடமிடுவோய் மலரடி சரணம் (236)

சரணம் சரணம் சரவணபவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்..
சரணம் சரணம் சண்முகா சரணம்..! (239)


கந்தர் சஷ்டி கவசத்தின் பலன்கள்

பயம் நீங்கும்: கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்வதன் மூலம் மனதில் உள்ள பயம் நீங்கி, மன அமைதி கிடைக்கும்.
நோய் நீங்கும்: உடல்நலக் கோளாறுகள், மனநலப் பிரச்சனைகள், வறுமை போன்ற துன்பங்கள் நீங்க இந்தப் பாடல் உதவும் என்று நம்பப்படுகிறது.
பாதுகாப்பு: எதிரிகளின் தொல்லைகள், செய்வினைகள், துஷ்ட சக்திகள் போன்ற எதிர்மறை தாக்கங்களிலிருந்து முருகப் பெருமான் இந்தப் பாடலை ஓதுபவர்களைக் காப்பார் என்று கூறப்படுகிறது.
செல்வம் பெருகும்: வறுமையால் வாடுபவர்கள் இந்தப் பாடலைத் தினமும் பாராயணம் செய்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
நவகிரக அருள்: நவகிரகங்களின் தீய தாக்கங்களிலிருந்து விடுபட்டு, அவற்றின் அருளைப் பெற கந்த சஷ்டி கவசம் உதவுகிறது.
நேர்மறை ஆற்றல்: இந்தப் பாடலைத் தினமும் படிப்பதால் உடலில் நேர்மறை ஆற்றல் பரவி, சுறுசுறுப்பு அதிகரிக்கும்.

Thanks to aanmeegam.com from where I have taken the text.

Thursday, December 1, 2022

சர்தார்!



கொஞ்சம் நல்ல கருத்துக்களை எடுத்துக்கொள்ளுங்கள். (தண்ணீர் பற்றாக்குறை வருடாவருடம் வருகிறது. அதனால் அது சிறந்தது! ) அதனுடன் அது சம்பந்தமான டீடெயில்ஸ் சேர்த்துக்கொள்ளுங்கள். தமிழ் தெரியாத கதாநாயகியை சேர்த்துக்கொள்ளுங்கள். (பாட்டில் வந்தால் போதும்). நிறைய சண்டை காட்சிகளை சேர்த்துக்கொள்ளுங்கள். raw , intelligence , cbi , national security advisor போன்ற வார்த்தைகளை சேர்த்துக்கொள்ளுங்கள். பெரிய பெரிய பாக்டரிகளில் சண்டை காட்சிகளை வைத்துக்கொள்ளுங்கள்! விக்ரமின் சிறை சண்டை பிரமாதமாக ஒர்க் அவுட் ஆகியது. அதனால், சிறையில் ஒரு சண்டை காட்சியை சேர்த்துக்கொள்ளுங்கள். அதில் சித்தப்பா செண்டிமெண்ட், குழந்தை செண்டிமெண்ட் எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் கலக்கி லாஜிக் போக நன்கு வடிகட்டுங்கள்! சர்தார் திரைப்படம் தயார்!

உளவாளி. அவருக்கு தெரியாததே இல்லை! தனி ஆளாக பாகிஸ்தான் ஆர்மி கேம்பில் நுழைந்தது மூன்று விதமான மேக்கப்பை போட்டுக்கொண்டு, அங்கிருக்கும் ராணுவ ரகசியங்களை டீகோட் செய்து இந்தியா அனுப்பி, பலரை காப்பாற்றி, தென் இந்தியா கிராமத்தில் அவர் உளவாளி என்று குடும்பத்தினருக்கும் தெரியாமல் வாழும் நாடக கலைஞன் - ஹீரோ.

32 வருடங்கள் ஆனாலும் இன்று இருக்கும் புள்ளிவிவரங்களெல்லாம் விரல் நுனியில் வைத்திருக்கிறார்! சண்டையில் நூறு பேரை அசாதாரணமாக வீழ்த்துகிறார்!

கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வது போல் பொய் சொல்லலாம். அதுக்குன்னு ஏக்கர் கணக்கில் சொல்லக்கூடாது!

கார்த்தி ஒரு படத்தில் பற்பல மாறுவேஷம் போடவேண்டும் என்ற ஆசை நிறைவேறியிருக்கிறது! அவ்வளவுதான்!

இந்தப் படம் பார்ப்பதற்கு பதில் வேறு ஏதாவது உருப்படியான வேலையை பார்க்கலாம்!

Friday, November 4, 2022

காந்தாரா !

கன்னடப்படம். கர்நாடகா, ஆந்திரா, இந்தி பெல்ட்களில் ஓடு ஓடு என்று ஓடுகிறது. பெரிய நடிகர்கள் இல்லை. பெரிய பட்ஜெட் இல்லை. வெறும் 16 கோடி செலவழித்து இதுவரை 300 கோடி சம்பாதித்திருக்கிறது! வெளிவந்து ஐந்து வாரங்கள் ஆகியும் வசூல் குறையவில்லை. இந்தியில் அதற்க்கு பின் வந்த இந்தி படங்களை பின்னுக்கு தள்ளிவிட்டது இந்தியில் வெளியான டப்பிங் படம்! தமிழகத்தில் பெரிய வசூல் இல்லாததற்கு காரணம் இதை ரெட் ஜெயண்ட் வெளியிடாததுதான் என நினைக்கிறேன். பிரின்ஸ், சர்தார் படங்கள் தப்பின! தமிழிலும் நன்றாக ஓடவேண்டும் என விரும்புகிறேன்.

படத்தை பார்த்ததில் இருந்து மந்திரித்து விட்டது போல இருக்கிறது! ஒரு படம் இப்படி பயித்தியமாக அடிக்க முடியுமா என்று வெகுவாக குழம்பினேன்... இரண்டாம் முறை பார்த்தவுடன் தெரிந்தது இது படம் இல்லை. அனுபவம். மருந்தை தேனில் குழைத்து கொடுத்திருக்கிறார்கள். ஆச்சர்யம் என்னவென்றால் மருந்தும் இனிப்பாக இருக்கிறது!

கலைகளை முன்னிறுத்தி பல படங்கள் வந்திருக்கின்றன. இந்த படத்தில் பூத கோலா என்று மங்களூர் அருகில் நடக்கும் கலையை முன்னிறுத்தியிருக்கிறார்கள். ஆனால் ஒரு மிகப்பெரிய வித்யாசம். கிட்டதட்ட கலையை முன்னிறுத்தும் எல்லா படங்களிலும் பார்ப்பது அதை செய்யும் மனிதர் பற்றியே. கலையில் அந்த மனிதரின் பாண்டித்யம், அதற்கு அவர் கொடுக்கும் விலை, கடைசியில் அவர் பெறும் அங்கீகாரம், அதற்கிடையே காதல், இதைதான்! இந்த படத்தில்தான் எதற்காக அந்த கலை என்பதை முன்னிறுத்தியிருக்கிறார்கள். இந்த கலை வழிபாட்டு முறையுடன் எப்படி பின்னி பிணைந்திருக்கிறது என்று காட்டுகிறது இந்தப் படம்.

அதேமாதிரி நாம் வழிவழியாக பார்த்து வந்த 'சாமி வருதல்' என்பதில் பலருக்கும் துறுத்தி நிற்கும் கேள்வி.. சொல்வது சாமியாடியா.. சாமியா.. என்பது. இந்த படத்தைவிட இதற்கு அழகான விளக்கம் கொடுத்த எதையும் நான் இது வரை பார்த்ததில்லை!

படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் வரும் காட்சிகளில் நான் நம்பும் குலதெய்வத்தை நான் உணர்ந்தேன். படத்தை பார்த்த பலரும் அதை உணர்வதால்தான் மறுபடி மறுபடி பார்க்க வருகிறார்கள் என நினைக்கிறேன்! இது போன்ற ஒரு அனுபவத்தை வாழ்க்கையில் அடைந்ததில்லை!

ஆத்மார்த்தமாக நடித்த ரிஷப் ஷெட்டி , கிஷோர், அச்யுத் குமார், சப்தமி கவுடா, மானசி சுதீர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும். முக்கியமாக எழுதி, நடித்து இயக்கிய ரிஷப் ஷெட்டி அவர்களுக்கு!

Friday, November 12, 2021

அமெரிக்க அனுபவம் - வித்யாசமான பயண அனுபவம் - 3




பழைய பாகங்களை கொஞ்சம் சிரமம் பார்க்காமல் படித்துவிடுங்கள். சில வருடங்களுக்கு முன் தொடங்கினேன். 3-ம் பதிவை எழுத மறந்துவிட்டேன். இதோ இப்போது.


அமெரிக்க அனுபவம் - வித்யாசமான பயண அனுபவம் - 1

அமெரிக்க அனுபவம் - வித்யாசமான பயண அனுபவம் - 2


கார் கிடைத்தவுடன் நேரே ரிஸார்டுக்கு சென்றோம். உச்சி வெய்யில் என்றதால் காரில் ஏசி ஓடிக்கொண்டிருந்தது. ஊர் அப்போது கூட பனி போர்வை பார்த்துக்கொண்டு அழகாக இருந்தது. சரி ஏசி எதற்கு என்று கண்ணாடியை இறக்கினால், வெய்யில் பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தது. இந்த வெய்யிலில் பனிப்போர்வையா? குளிரவும் இல்லையே என்று ஒன்றுமே புரியவில்லை. பிறகுதான் தெரிந்தது அது பனி இல்லை. வெறும் புகை என்று!


ரேடியோவை போட்டால் ஊருக்கு சில மைல் தூரத்தில் காட்டுத்தீ என்பதால் ஊரெல்லாம் புகை என்று தெரிந்தது! கொடுமை!


மனைவிக்கு அந்த புகையில் ஒரே தலைவலி! அங்கிருந்த மீதி நாட்களும் இந்த கொடுமை தொடர்ந்தது.


ஒரு வழியாக ரிசார்ட் சென்றடைந்தோம். மிக அழகாக இருந்தது. ரூம் வசதியாக இருந்தது. அங்கும் புகை மூடி காட்டுத்தீ வாசனை காற்றில். கொண்டு வந்த உணவை உண்டு அங்குமிங்கும் திரிந்து பொழுது போக்கினோம். இரவு ரிஸார்ட் உணவகத்துக்கு சென்றோம். சாப்பிடும்போது தெரிந்தது தான் சமையல்காரருக்கு சமைக்கத் தெரியாது என்று!  


நொந்து கொண்டே சென்று படுத்தோம்.


அடுத்தநாள் காலை அங்கிருந்து 30 மைல் தொலைவில் உள்ள கிரேட்டர் ஏரிக்கு செல்லும் பிளான். ஒரு காலத்தில் எரிமலையாக இருந்து 7700 வருடத்துக்கு முன் வெடித்து வெளிப்பக்கம் மலையாகவும் நடுவில் பெரிய ஆழமான குழியாக ஆகி, அதில் கொஞ்சம் கொஞ்சமாக சுற்றி இருக்கும் பனி உருகி ஏரியாக நிரம்பி இருக்கிறது. அதிகம் இல்லை ஜென்டில்மென். 10-12 கிலோமீட்டர் சுற்றளவு. 1.2 கிலோமீட்டர் ஆழம். அத்தனையும் 99.99% சுத்தமான தண்ணீர். இது தான் இந்த ஊரின் மிகப்பெரிய அட்ராக்ஷன்!


வருவதற்கு முன் தெரிந்து கொண்ட ஒரு விஷயம் தண்ணீரின் கரை சாலையிலிருந்து வெகு கீழே (200-300 அடி). இறங்கி தண்ணீரை தொடக்கூட முடியாது. 


சரி வந்தாயிற்று. போய் பார்க்கலாம் என்று கிளம்பிவிட்டோம். வெளியே வருவதற்கு முன், இந்த ஊரில் இதுவரை கிடைத்த சனிப் பார்வை பலன்களை எண்ணி இதற்கு அந்த ஏரி அருகில் இருந்த ஆன்லைன் கேமராவில் ஏரியை பார்த்துவிட்டு போகலாம் என்று ஒரு யோசனை.


ரிஸார்ட்டின் கம்ப்யூட்டரில் போய் பார்த்தோம். நல்லவேளை. மாங்கு மாங்கு என்று போயிருந்தால் மறுபடியும் நொந்திருப்போம்! அங்கும் ஒரே புகை என்பதால் சாலையிலிருந்து தண்ணீரே தெரியவில்லை! போயிருந்தால் அங்கும் புகையைத்தான் பார்த்திருப்போம்!


அந்த ரிஸார்ட்டில் விளையாட வைத்திருந்த ஸ்னூக்கர் டேபிளில் விளையாட ஒரு கேமுக்கு 50 சென்ட், அங்குள்ள ஸ்விம்மிங் பூலில் குளிக்க 50 சென்ட் என்று அவர்கள் அல்பமாக பிடுங்கியதெல்லாம் கொடுமை.


அழுது கொண்டே ஊர் திரும்பினோம்!


ஆனால் அந்த ட்ரிப்பை நினைத்து நினைத்து சிரிக்காத நாளில்லை!



Wednesday, November 10, 2021

கோடியில் ஒருவன்!

 




தெளிவான கதை. இறுக்கமாக பின்னப்பட்ட திரைக்கதை. வேகமாக நகரும் திரைக்கதை. மிகப்பெரிய ஹீரோயிசம் இல்லை. நம்ப முடியாத சண்டைகள் அதிகம் இல்லை. 


நேரம் போனதே தெரியவில்லை. படம் முடியும்போது கூட, அதற்குள் முடிந்து விட்டதே என்று இருந்தது.  ஆனால் திருப்தியான முடிவாக இருந்தது.


இத்தனைக்கும் விஜய் ஆண்டனிக்கு வழக்கமான பிரச்சனை தான். நடிப்பு வரவில்லை. திறமைசாலிகளை கண்டுபிடிக்கும் திறமை உள்ளவர் நடிப்பை வளர்த்துக்கொள்ளவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது!


டைரக்டர் மிக திறமைசாலி. வாழ்த்துக்கள் 


Sunday, November 7, 2021

Doctor - டாக்டர் படம்



டாக்டர் படம் netflix -இல் வெளிவந்திருக்கிறது. பொதுவாக நல்ல விமர்சனங்கள் இருப்பதாலும் பெரிய அளவு ஹிட் என்பதாலும் மிகுந்த எதிர்பார்ப்போடு பார்த்தேன்.


பெரிய ஏமாற்றம்!


குழந்தை கடத்தல் என்பது வெகு சீரியஸான விஷயம். அதை டார்க் காமெடி என்ற பெயரில் கொடுமை படுத்தி இருந்தார்கள். படத்தின் இசை சுத்தமாக ஒட்டவில்லை.


படத்தில் இம்மி அளவும் லாஜிக் இல்லை. 


**spoiler alert**


கோவாவில் பெரிய வில்லன். அரசில் எல்லோரையும் தெரியும் என்கிறார். சிவ கார்த்திகேயன் ஒரு ஐஸ் க்ரீம் கடை நடத்துபவர்  என்பதையும் குழந்தை கடத்தலையும் செய்பவர் என்பதை எளிதாய் நம்பும் ஏமாளியாக இருக்கிறார்!


படத்தின் க்ளைமாக்ஸ் 1970 வந்த மோசமான படங்களை நினைவு படுத்தியது 



எல்லா படத்திலும் நிறைய பேசி நடிப்பதால் இதில் சிவகார்த்திகேயன் அண்டர் பிளே பண்ண முயற்சிக்கிறார். அதனால் லைஃபே இல்லாமல் ஒரு நடிப்பு 



எல்லா விதத்திலும் இந்த படம் ஒரு குப்பை! 


இந்த படம் எப்படி ஓடியது என்பது பெரிய ஆச்சர்யம்!


பணம் போட்டு லாபம் பார்த்த சிவகார்த்திகேயன் பெரிய அதிர்ஷ்டசாலி!


Tuesday, September 29, 2020

பங்கு சந்தை முதலீடா சூதாட்டமா?



உங்கள் கையில் நிறைய பணம் இருக்கிறது. அதை முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள். 


ஏதாவது ஒரு டீக்கடை ஆரம்பிக்கலாம் என நினைக்கிறீர்கள். ஏற்கனவே நீங்கள் வேலையில் இருப்பதால், ஏற்கனவே இருக்கும் டீக்கடை ஒன்றில் முதலீடு செய்யலாம் என நினைக்கிறீர்கள். வீட்டருகே புதிதாக வந்த ஒரு கடை உங்களுக்கு ஞாபகம் வருகிறது. பிரமாதமான அலங்காரத்துடன் இருக்கும் அந்த கடை வந்த சில நாட்களிலேயே எப்போதும் கூட்டமாக இருப்பதும் உங்களுக்கு தெரியும். லேட் பண்ண வேண்டாம் என்று அந்த உரிமையாளருடன் பேசி ஐந்து லக்ஷம் பணம் போடுகிறீர்கள். நேற்றுவரை டீக்கடை வாடிக்கையாளராக இருந்த நீங்கள் இன்று டீக்கடை பங்கு தாரர் என்று பெருமையாக இருக்கிறது!

நீங்கள் செய்தது முதலீடா? சூதாட்டமா?

சூதாட்டம். டீக்கடை எவ்வளவு லாபத்தில் இயங்குகிறது? எவ்வளவு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது? மாதம் எவ்வளவு செலவு? மாதா மாதம் வருமானம் அதிகரிக்கிறதா ..

இதெல்லாம் தெரியாமல் பணம் போட்டால் சூதாட்டம். தெரிந்து முடிவெடுத்து பணம் போட்டால் முதலீடு!

இதே தான் பங்கு சந்தையிலும்!