அலுவலகத்தில் மதிய நேரம். அன்று எடுத்து சென்றிருந்த 'மேத்தி பராத்தாவை' மைக்ரோவேவில் சூடு பண்ணிக்கொண்டிருந்தேன். (என் மனைவி ஒரு அருமையான சமையல் நிபுணர்)
அதை எடுக்கும்போது, அருகில் நின்றிருந்த அமெரிக்க சக ஊழியை..
"ஓ! பார்க்கும்போதே சாப்பிடவேண்டும் என்று தோன்றுகிறது.. நீங்களே சமைத்ததா?" என்றார்..
"கிழித்தேன்.. எனக்கு சாப்பிட மட்டும்தான் தெரியும். இது என் மனைவி செய்தது" என்றேன்.
"நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர்! எனக்கும் என் கணவருக்கும் வீட்டில் செய்த சமையல் என்றால் அவ்வளவு இஷ்டம்.. ஆனால் பாருங்கள், எனக்கும் சமைக்க தெரியாது. அவருக்கும் சமைக்க தெரியாது.. தினமும் சாப்பாடு வெளியில் தான். இல்லையேல் Frozen Dinner தான்.."
என்று சொல்லிக்கொண்டே போனார்!
கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், யோசித்துப்பார்த்தால் இது தான் உண்மையான சுதந்திரம் என்று தோன்றியது. வேலைக்கும் போய்கொண்டு சமையல் கட்டையும் தான் மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் மனைவியை நினைத்துக்கொண்டேன். பாவமாக இருந்தது.
வீட்டுக்கு போனவுடன் மேத்தி பராத்தா செய்வது எப்படி என்று மனைவியிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்..